"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிருக்கு எல்லாம் இனிது ."
(தம் மக்களின் அறிவுடைமை , பெற்றோர் தமக்கு இன்பம் பயப்பதைக் காட்டிலும் இம் மாபெரும் உலகத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் பயப்பதாகும்)
நல்லதம்பியின் பிள்ளைகள் இருவரும் பாவலரின் வழிகாட்டுதலில் அறிவுமிக்கவர்களாக
வளர்ந்துள்ளனர். பெரியவன் பாவாணன் இரண்டாம் ஆண்டு வேதியல்(chemistry) படிக்கிறான்.
பாடத்திட்டத்தில் உள்ள நூல்களோடு படிப்பை நிறுத்திக்கொள்வதில்லை. நூலகத்தில் உள்ள மூல நூல்களை வீட்டுக்கு எடுத்து வந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வான் .90% மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்வான். துணைப்
பாடமான இயற்பியலிலும்(physics) அதே போல் நன்கு படித்து முதலிடம் பெறுவான். வேதியல் கழகத்தின் கூட்டங்களில் வேதியல் தலைப்புகளில் தமிழில் உரையாற்றுவான்.