Thursday, May 31, 2018

குறுந்தொகை - பாடல் 400

சேயாறு செல்லாம் ஆயின் இடரின்று
களைஇக் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகிக் களரிக்
கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை
வலவோய் இன்று தந்தனை தேரே
நோயுழந்து உறைவியை நல்க லானே .

பாடலின் பொருள் :

நீண்ட வெளியில் செல்வோமாயின், பெரும்தோளையுடைய  தலைவியின் காமமாகிய துயரை இன்று களைதல் நம்மால் இயலாதென்று,
நல்லதை விரும்பி எண்ணிய மனத்துடன் பாகனே நீ தேரைச் செலுத்தினை!
அதாவது அவ்வாறு நல்லதை  எண்ணிய விரைந்து கரம்பு நிலத்தில்
மனத்தையுடையை  ஆகி  , முரடான மேடுகள்  உடையும்படி விரைந்து , கரம்பை நிலத்தில் புதுவழி கண்டு செலுத்திய அறிவுத்திறனுடைய தேர்ப்பாகனே ! காம நோயால் பிரிவுத்துயரில் உழன்று வருந்தி இருந்த தலைவியை  ,நலமுடன் நீ தந்ததால் , இன்று  நீ தேரை மட்டுமா ஊருக்குள் தந்தனை ? இல்லை ; என் தலைவியையே உயிருடன் தந்தனை! ! நீ போற்றுதற்கு உரியை !


இப்பாடலை எழுதியவர் பேயனார்

குறுந்தொகை - பாடல் 350

அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குன்றஞ் செல்லா தீம்எனச்  
சொல்லின மாயின் செல்லார் கொல்லோ
ஆற்றயல் இருந்த இருந்தோட்  டஞ்சிறை
நெடுங்காற் கணத்துள் ஆளறி வுறீஇ
யாறுசெல்  வம்பலர் படைதலை பெயர்க்கும் 
மலையுடைக்  கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி  னோரே .

பாடலின் பொருள்

தோழி ! வாழி ! ஒன்று சொல்வன் கேட்பாயாக ! பாலை வழியின் பக்கத்திலிருந்த கரிய கொம்பையும் அழகிய சிறகையும் நீண்ட கால்களையும் கொண்ட கண ந்து ள்  என்னும் பறவையானது வழிப்பறி கள்வராம் ஆள்கள் மறைந்து இருப்பதை முன்னதாக அறிவுறுத்தும் .அவ்வாறு முன்கூட்டி அறிவுறுத்தி , அவ்வழியே செல்லும்
வணிகப் பயணிகளின் படைகளை அங்கிருந்து நீங்கி வேறு இடத்திற்கு மாற்றிப் போகச் செய்யும் .அத்தகைய மலைகள் சூழ்ந்த காடுகளைக் கடந்து , நிலை நில்லாதபொருள் வேட்கையால் பிரிந்த தலைவரின் முன் நின்று ,
'பனிக்காலத்தே தாங்க இயலாத  கடுந் துயரடைவோம் ,பிரிந்து செல்லாதீர் ' என முன்பே சொல்லினமாயின் சென்றிருப்பாரோ ?

இப்பாடலை எழுதியவர்  ஆலந்தூர்கிழார்

Thursday, May 17, 2018

குறுந்தொகை - பாடல் 310

புள்ளும் ;புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்புநனி உடைத்தே வானமும்
நம்மே  போலும் மம்மர்த்து  ஆகி
எல்லை கழியப் புல்லென் றன்றே ;
இன்னும் உலெனே - தோழி ! _ இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உறைக்குநர்ப் பெறினே .


தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு  தனி உடைத்து ; வானமும் நம்மே  போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று! இந் நிலையை ,தண்ணிய கமழும் ஞாழல்  உள்ள தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறின் ,இன்னும் உளென்  


இப்பாடலை எழுதியவர் பெருங்கண்ணன்

குறுந்தொகை - பாடல் 275

முல்லை ஊர்ந்த கல்லுயர்பு ஏறிக்
கண்டனம் வருகம் ; சென்மோ- தோழி! 
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல்லார் நல்லான் பூமணி கொல்லோ ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்?- ஆண்டு இயம்பிய உளவே .

பாடலின் பொருள்
தோழி காளையை உடைய பசுவினங்கள் மாலை ஊரை வந்தடையும் .புல்லை உண்ட நல்ல  பசுக்களின் கழுத்திற்  பூண்டிருக்கும்  மணியோசையோ ?செய்யக்கருதிய செயலைச் செய்து முடித்த நிறைவுகொண்ட உள்ளத்தோடு ,வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன்   இரு பக்கமும், பாதுகாத்தவராக வந்து கொண்டிருக்க , ஈரமாகிய மணலையுடைய காட்டுவழியிலே வரும் தலைவனது தேரின் மணியோசையோ ?முல்லைக்கொடி படர்ந்திருக்கும் கல்லின் மேலாக ஏறி  நின்று  அங்கே ஒலிப்பனவாக உள்ளவை யாவையென யாமும் கண்டு வருவோம் ; வருவாயாக

இப்பாடலை  எழுதியவர் ஒக்கூர்  மாசாத்தி